ஆழிப்பேரலை
தமிழினமே, நீ
சொந்த நாட்டிலேயே
அகதியாய் வாழ
இன்னும் எத்தனை முறை
சபிக்கப்படுவாய் ?
ஆக்கிரமிப்பால்,அரசியலால்
பண்பாட்டால்,படையெடுப்பால்
காவியால்,கல்வியால்
மொழியால்,வாழும் நிலையால்
இதோ உன் உறவுகள்
ஈழத்தில்,
இப்போது தண்ணீரால்!
டிசம்பர் 26
புத்தாண்டை நோக்கிய
புன்னகை முகங்களில்
அதிர்ச்சியும்,அலங்கோலங்களும்!
அது என்ன
கடல் நடத்திய கதகளியா?
இல்லை,
ஆழிப்பேரலையின்
ஊழித்தாண்டவம்!
நீரின்றி அமையாது உலகு
நீரே ஊரானால்…?
கரையெல்லாம் தண்ணீர்
தரையானால்…..?
என்
ஆதித்தமிழனை அழித்த
ஆழிப்பேரலையை,
காவிரிப்பூம்பட்டிணத்தின்
கடல்கோளினை
புத்தகத்தில் படித்ததுண்டு,
பக்கத்தில் பார்த்த்தில்லை !
இதோ, இன்று
அக்கரைப்பேட்டை அழிந்த
அதிர்ச்சியிலிருந்து
மீளவில்லை இன்னும்….
கட்டிடங்களை-கார்களை,
கரையோரக் குப்பங்களை,
கடவுளிருந்த கோயில்களை,
பாலங்களை-படகுகளை,
ஓடி விளையாடிய சிறுசுகளை,
உற்சாக நடைபோட்ட பெருசுகளை
உல்லாச நடைபோட்ட காதல்களை
எல்லோரையும்,எல்லாவற்றையும்
தொட்டு இழுத்து சுவைத்துப்
பின் துப்பிச்சென்றாயே
கடலே,
உனக்கு என்ன
அவ்வளவு பெரிய குடலா?
கடலலை தாலாட்டிய
வேளாங்கண்ணியின்
கரையெது?கடலெது
அடையாளம் தவறிய அவலம்!
மாதாகோயிலே
மார்ச்சுவரியாகிப்போன துயரம்!
தோண்டிப் புதைக்கபடுவதற்குப் பதிலாக
தோண்டித் தோண்டி எடுக்கப்பட்ட
மரணங்களும்,மனிதர்களும்!
ஊரை அழித்து
உறவைத் தொலைத்து
தெருவையெல்லாம்
தண்ணீர்த் தடங்களாக்கி
வீடுகளையெல்லாம்
வெறுந்திடலாக்கிய கடலே,
உனக்குள்
உப்பிருந்தது தெரியும்,
முத்திருந்தது தெரியும்,
சத்துள்ள மீனிருந்தது தெரியும்,
இன்னும் ஏராளம்,ஏராளம்
இயற்கை வளமிருப்பதும் தெரியும்
ஆனால் கடலே, உனக்குள்
சுனாமி என்றொரு
சுடுகாடிருந்தது மட்டும்
தெரியவில்லை?
ஆனாலும்,
ஊழித்தாண்டவமாடிய இந்த
ஆழிப்பேரலைகள்
சொன்ன செய்திகள்
ஏராளம், ஏராளம்!
இயற்கையை வெல்வோம் என்று
ஓசானில் ஓட்டை போட்ட மனிதனின்
செயற்கைத் திமிர் சிதைந்து போயிற்று!
இயற்கையோடியைந்த வாழ்க்கையை
இயந்திரத்தோடு இணைத்த
மனிதனின் விஞ்ஞானம்
முறித்து கீழே கிடக்கிறது!
பொங்கிய கடலில்
எங்கும்,எங்கும்
மனிதர்கள் மரணித்தாலும்
மனிதம் தழைத்தது!
ஆம், இது ஒன்றும்
அயோத்தியைப் போல,
கோத்ராவைப் போல,
பெஸ்ட்பேக்கரியைப் போல
மதங்கள் நட்த்திய கொலையல்ல!
இயற்கையின் சீற்றத்திற்கு
மனிதஇனம் கொடுத்த விலை!
எனவே தான்,
ஹிரோசிமா, நாகசாஹி,
வியத்னாம், எத்தியோப்பியா,
பாலஸ்தீனம், போபால்,
ஈழம்,
குஜராத், குடந்தை
இப்போது
சுமத்ரா தொடங்கி சோமாலியா வரை
மனிதர்கள் எங்கு
கொத்துக் கொத்தாய்
செத்தாலும் அங்கே
நேயம் முளைக்கிறது!
மதம் கடந்து – சாதி கடந்து
மொழி கடந்து – வழி கடந்து
மனிதம் தழைக்கிறது,
மனிதம் செழிக்கிறது,
மனிதத்திற்கு மரனமில்லை!
இது,
பேரலை சொன்ன
நேரலை செய்தி!
நமக்கு ஒன்றும்
சுனாமி புதிதல்ல,
பஃறுளியாறும்,லெமூரியாவும்
பண்டைய சுனாமி அழித்த
உச்சத் தமிழனின்
மிச்சங்கள் தாம் நாம்!
எனவே,
சோகங்கள் துடைத்தெறிவோம்!
நிவாரணம் என்பது நிரந்தரமில்லை
தங்கிச் செல்ல ஒரு கூடாரம்!
தடவிச் சொல்லும் ஒரு ஆறுதல்!
எழுந்து நின்று தடம்
எடுத்து வைக்க ஒரு ஊண்றுகோல்!
எனவே,
எழுந்து நிற்போம்,
விரைந்து நடப்போம்!
இயற்கையை இயற்கையாய்
இருக்க விடுவோம்!
இயற்கையோடு இயற்கையாய்
இருக்கப் பழகுவோம்!
கரை நெடுக
காடுகள் செய்வோம்!
அலை மீறாமல்
அலையாத்தி வலை விரிப்போம்!
வாருங்கள்,
இந்த சோக இருளிலிருந்தே
புதிய சூரியனை நிர்மனிப்போம்!
[16.01.2005ல் தமிழ்க் கவிஞர் பெருமன்றம் நடத்திய கவியரங்கில்.....]
——————————————-
